வள்ளலார் வரவில்லையெனில் இறவாப் பெருநிலை இல்லை.
சின்னம்மையார் இல்லை எனில் வள்ளலார் வந்திருக்க மாட்டார்.
======================================================================
சின்னக் காவனம்,திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில்
உள்ள சிறிய கிராமம். பொன்னேரியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரம் இருக்கும்.
இங்குதான் வள்ளற் பெருமானை ஈன்றெடுத்த சின்னம்மையார் பிறந்தார்.
திருமணம் செய்து சென்ற சின்னம்மையாருக்கு மருதூரில் வள்ளற் பெருமான்
மகவாக அவதரித்தார்.
அவர், மனித குலம் மேம்பட,இறவாப் பெரு நெறியை, சுத்த சன்மார்க்கத்தின்
மூலம் தெளிவாக எடுத்துரைத்துச் சென்றார்.
வள்ளலார் அவதரித்திருக்காவிடில், இந்த உலகம் இறவாப் பெரு நெறியை
(Deathlessness) அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதன் இறை நிலையினை அடையலாம்
என இந்த உலகுக்கு எடுத்துச் சொன்ன பெருமை வள்ளற் பெருமானுக்கே உண்டு.
தவிர, தாமே அதற்கு உதாரணமாக புருஷராகவும்வாழ்ந்து காட்டினார்.
இன்று எல்லோருடைய உள்ளத்திலேயும் அவர் புகுந்து கொண்டு
சுத்த சன்மார்க்க பேராட்சியை தமது அருட் செங்கோலால் நடத்தி வருகின்றார்.
இணைய தளத்தில் வலம் வந்த அவரது பேரருளால், இந்த 12 ஆண்டுகளில்
பல்வேறு நாடுகளும்,வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளையும்
கொள்கைகளையும் தெரிந்து கொள்ள உதவி வருகின்றார்.
வள்ளற் பெருமான் உதித்திராவிடில், முந்தைய பழக்கத்தின் படி, இறைவனுடன்
சென்று கலத்தல் என்ற பழநெறிதான் நீடித்திருக்கும்.வள்ளலார் உதித்த பின்னர்,
கலியுகம் 1899 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது.
சுத்த சன்மார்க்க காலம் பிறந்தது. மனிதனும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தைத்
தவறாமல் கடைப்பிடித்து, உயிர்க்குலத்துக்குத் தொண்டு செய்து சத் விசாரம்,
பரோபகாரம் செய்வதன் மூலம் இறவாப் பெரு நெறியினைக் கண்டிப்பாக
அடையலாம் என வள்ளற் பெருமான் வாய்ப்பறையார்த்துச் சென்றார். நானே
சன்மார்க்கம் நடத்துகிறேன் என்றார் வள்ளற் பெருமான்.
வள்ளற் பெருமான் இந்த உலகுக்கு வருவிக்கக் காரணமாக இருந்த
தாயார் சின்னம்மை பிறந்த சின்னக் காவனத்தில்...அவர் குழந்தையாக இருந்த
போது எப்படியெல்லாம் சின்னக் காவனத்தில் வலம் வந்திருப்பார்.
அந்த ஊரில் நூற்றெட்டீஸ்வரர்கோவில் உள்ளது. வள்ளலார் அங்கு
வந்து சென்ற குறிப்பெல்லாம் அந்தகோவிலின் சுவர்களில் எழுதி
அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பெருமான் வாழ்ந்த வடலூர், மேட்டுக்குப்பம், மருதூர், சிதம்பரம், சென்னை
திருவொற்றியூர், என்று, சன்மார்க்க அன்பர்கள், சென்று வருகின்றனர்.
ஏனெனில் அவர் வாழ்ந்த இடத்தில் தாங்களும் சென்று வரவேண்டும் என்ற
எண்ணம் தான். சின்னக்காவனமும் அத்தகைய ஒரு ஊர்தான்.
சின்னக்காவனத்தில் சன்மார்க்க சங்க அங்கத்தினர்கள்,.தற்போது
ஒரு கட்டிடம் எழுப்பும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால் கோள் விழாவும் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது.
ஆனால், சன்மார்க்க அன்பர்களில்,பெரும்பாலோர் அந்த ஊருக்குச்
சென்றதில்லை. ஒரு சில ஆண்டுகளாக, அங்கு பல்வேறு விழாக்கள் எடுத்து
வருகின்றனர். ஊரன் அடிகள் எல்லாம் அந்த ஊருக்குச் சென்று சொற்பெருக்
காற்றியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எல்லா சன்மார்க்க அன்பர்களும்
சின்னக்காவனம் செல்ல வேண்டும்.அந்த அன்பர்களின் சீரிய முயற்சிக்கு
ஆதரவு தர வேண்டும். சுத்த சன்மார்க்கம்
கற்பித்த வள்ளற் பெருமானைப் பெற்றெடுத்த தாயார் சின்னம்மையாருக்கு
நாம் செய்யும் உண்மைத் தொண்டு இதுவேயாகும்.
சின்னம்மையார் இல்லாவிடில், வள்ளற் பெருமான் இல்லை.
வள்ளற் பெருமான் இல்லாவிடில், சுத்த சன்மார்க்க நெறியுமில்லை
இறவாப் பெரு நெறியை இந்த உலகம் அறிந்திருக்காது.
எனவே சன்மார்க்க அன்பர் ஒவ்வொருவரும் கண்டிப்பாகச் சென்று
தரிசனம் செய்ய வேண்டிய இடம் . சின்னக் காவனம்.