பாண்டிச்சேரி அருகே கோவனேஷ்வர் பிரமிட்
நடராஜர் கோவிலில் நடந்த அதிசயம்..
பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் கடற்கரை ஓரத்தில் Dune Resort அருகே ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு பிரமிட் ஆலயம் எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு கோவனேஷ்வர் பிரமிட் நடராஜர் கோவில் எனப் பெயரிட்டுள்ளனர்.
எகிப்தில்தான் பிரமிட் கட்ட வேண்டுமா ? இந்தியாவிலும் பிரமிட் கட்டலாமே என்ற வகையில் எடுத்த முயற்சியின் விளைவு பிரமிட் போன்றுள்ளது இந்த கோவில்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான், நடராஜபதி மாலையில் அம்பலக் கூத்தனின் திரு நடனத்தை கீழ்க் கண்டவாறு விவரிக்கிறார் என்பதை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அறிவர்.
அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
சுகாதீத வெளிநடுவிலே
அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
அனைத்தும் அவை ஆக்கல்முதலாம்
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
பொற்பொடுவி ளங்கிஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
பூரணா காரமாகித்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
சிறப்புமுதல் அந்தம்இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞா சித்திஅனு பவநிலை
தெளிந்திட வயங்குசுடரே
கருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
சுந்தரிக் கினியதுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
ஜோதிநட ராஜபதியே.
கடந்த 17.11.2008 அன்று மதுரை சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவரு திரு T.R. ஜவஹர்லால் சுமார் 12 சன்மார்க்க அன்பர்களுடன், இந்த அதிசய ஆலயத்தினை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார்.
சென்றிருந்த சமயம் நடராஜப் பெருமானின் முன், கம்பி கேட் போட்டு, சாத்தப்பட்டிருந்தது. நெடு நேரம் ஆகியும் அந்த கம்பி கேட் திறக்கப்படவில்லை.
ஆலயப் பூஜகருக்கு என ஒரு வீடு அருகில் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தும், அன்பர்கள் சென்ற சமயம் அவர் அங்கு இல்லை.
அப்போது, வழிப்போக்கர்கள் போல, அங்கு தரிசனத்துக்காக வந்த தம்பதியர் மாலை 5.00 மணி அளவில்தான் பூஜகர் வருவார். அதன் பின்னர் தான் ஆலயம் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர். தற்போதெல்லாம் இதுதான் நடைமுறை என்றனர்.
சென்ற அன்பர்களில், மதுரை அருட்பா ரெங்கநாதனும் ஒருவர். அந்த பிரமிட் ஆலயத்தின் மையப் பகுதியில் நடராஜப் பெருமானின் திரு நடன எழிற் கோலத்தினைப் பார்த்தவுடன்,
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பா பாடல்களை மனம் உருகப் பாட ஆரம்பித்தார்.
அன்பர்கள் குழாம், பூஜகர் வரும் நேரம் மாலை என அங்கு வந்தவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலை நம்பி, தாம் வாங்கிச் சென்றிருந்த பூக்களை எல்லாம், அந்த கம்பி கேட்டில் செருகி விட்டு திரும்ப எத்தனித்தனர்.
என்ன ஆச்சரியம் !
அந்த பூஜகர் திடீரென சைக்கிள் சகிதம் பிரசன்னமானார். அய்யா நான் வந்துட்டேன். எனது உறவினருக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அவரைப் பார்த்துவிட்டு வந்து விட்டேன் ஐயா.
வாருங்கள் அனைவரும். நடராஜப் பெருமானை தீப தரிசனத்தில் கண்டு களியுங்கள் என அனைவரையும் அழைத்துச் சென்றார்.
எம்பெருமானின் அருளினை என்னென்று சொல்வது என வியப்புற்றவாறே - சென்றிருந்த அன்பர்கள் அனைவரும் அந்த பிரமிட் ஆலயத்தின் உள்ளே சென்று நடராஜப் பெருமானைத் தரிசித்துத் திரும்பினர்.
அருட்பா ரெங்கநாதனின் திரு அருட்பாவிற்கு அம்பலக் கூத்தன் செவி சாய்த்து தன்னை நேரில் தரிசித்துச் செல்ல அனுமதி வழங்கிய பாங்கினை அனைவரும் சொல்லி வாயாற்றுப் போனார்கள்.
இந்த அதிசய பிரமிட் ஆலயம், சமீபத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற அமைப்பில் சிறிதாக இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு வந்த ஆழிப் பேரலை, இந்த ஆலயத்தினையும் விட்டு வைக்கவில்லை.
அதன்பின்னர், இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு, தற்போது புதுப் பொலிவுடன் விளங்குகின்றது.
ஆலயத்தின் முன்பு காளை ஒன்று படுத்திருந்தது. வெண்மையாக இல்லாமல் கருமையாக இந்த காளை உள்ளதே என்று எண்ணியபோது, உண்மையான காளை போன்ற அமைப்பில் கல்லினால் செதுக்கப்பட்ட காளை வடிவம் என்று அருகின் சென்றபின் தெரிந்தது. அந்த அளவிற்கு கலை நேர்த்தியுடன் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவையும் கேள்விப்பட்டவுடன் உங்களுக்கும் இந்த ஆலயத்தினை உடனே காண வேண்டும் என ஆவல் உங்களுக்கும் மிகுந்திருக்குமே …
உடன் சென்று அருள் நடனக் காட்சியினைக் கண்டு களித்து வாருங்கள்.