தீஞ்சுவை நீரோடையில் மென்காற்றின் விளைசுகத்தை அறிவதற்கு ... ... ...
Ramanujam
posted 38 months ago
02 Dec 2008 22:54:01 GMT 10:54:01 PM
1456 views
மேட்டுக் குப்பம் தீஞ்சுவை நீரோடையில் வள்ளலார் பன்னாட்டு சங்க மதுரை தலைவர் திரு T.R. ஜவஹர்லால் தனது குழுவினருடன்….
வடலூர் சத்திய ஞான சபை தரிசனத்திற்காக செல்லும் சன்மார்க்க அன்பர்கள், அருகே அமைந்துள்ள மேட்டுக் குப்பத்திற்கும், அதன் அருகில் அமைந்துள்ள தீஞ்சுவை நீரோடைக்கும் செல்லாமல் வருவதில்லை.
வள்ளல் பெருமானின் கருணையினால், இத் தீஞ் சுவை நீரோடை இங்கே உருவாகியுள்ளது என்பதை சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.
அதன் அருகே ஒரு பிள்ளையார் ஆலயமும் பன்னெடுங்காலமாகவே உள்ளது. அதனை ஒட்டி உள்ள நெடிய மரம் பகலில் நிழலைத் தரத் தவறியதில்லை.
தீஞ்சுவை நீரோடையில் குளிக்கும் சன்மார்க்க அன்பர்கள், உடை மாற்றுவதற்கென்றே அதனருகே ஒரு மண்டபமும் உள்ளது.
தற்போது அந்த மண்டபத்தின் சுவற்றில், திரு அருட்பா பாடல்கள் தற்போது எழுதி வைக்கப்பட்டுள்ளன.
வள்ளல் பெருமான் பாடிய கீழ்க்காணும் பாடல், அதில் முதலாவதாக உள்ளது.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
தீஞ்சுவை நீரோடையில் குளித்து நீராடி வரும்போது அந்த விநாயகர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள மரத்தடியில் அமர்வார் எவர் கண்ணுக்கும் இந்தப் பாடல்கள் தப்பாது.
பெருமானார் பாடிய பாடலின் அருட்சுவையினை அனைவரும் உடனடியாக உணர்வதற்கு இது உகந்த ஓர் இடமாகத் திகழ்கின்றது.
இதுவரை இத் தீஞ்சுவை நீரோடையை தரிசிக்காதவர்கள், அதிலே குளிக்காதவர்கள், மென் காற்றில் விளை சுகத்தை சுகிக்காதவர்கள், கண்டிப்பாக இனிமேல் காணாமல் அதன் சுகத்தை அனுபவிக்காமல், அத்துடன் சுத்த சன்மார்க்க சுகத்தையும் ருசிக்காமல் வர மாட்டீர்கள்தானே … …..
அந்த இடத்திற்கு கடந்த மாதம் சன்மார்க்கக் குழுவினரை அழைத்துச் சென்ற மதுரை மாவட்ட சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லாலும் அவர் உடன் சென்ற அன்பர்களும் தான், இங்கு 16.11.2008 அன்று சென்று வந்தார்கள்.