Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
திருவருளின் எண்ணம் - மரணமில்லாப் பெருவாழ்வைத் தருவதா?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருளின் எண்ணம் - மரணமில்லாப் பெருவாழ்வைத் தருவதா?

முன்னுரை

இன்றைய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பிரபஞ்சத்தில் அறிய விரும்பும் ஒர் ஆய்வு “உயிர்கள் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? உயிர்கள் உருவானதன் காரணம் என்ன? உயிர்கள் இறைவனால் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது? உயிர்கள் உருவானது இயற்கையின் பெரும்வெடிப்பு (Big Bang) என்கிற செயலின் மூலமா? அல்லது பிரபஞ்சத்தின் கருந்துளைகள் (Black Holes) மூலம் உருவாக்கப் பட்டதா? அல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உயிர்கள் அனைத்தும் உண்டாயினவா?

இதுமட்டுமல்லாது, உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உயிர்கள் உருவாக்கப்பட்டால் அதன் காரணம் தான் என்ன? ஒரு பெரிய சக்தி சலனப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அண்டங்கள், உயிர்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிவியியல் விஞ்ஞானிகள் இன்று கூறுகிறார்களே! அந்த சக்தி ஏன் சலனப்பட வேண்டும்? எதற்காகச் சலனப்பட வேண்டும்? என்பதும் புரியாதப் புதிர்களாக இருக்கின்ற கேள்விகள்.

அணு வெடிப்பும் ஆன்மீகமும்

பிரபஞ்சத்தில் புரியாதப் பல கேள்விகள் இருப்பினும், நமது ஆன்மீகம் இவற்றிற்கெல்லாம் பதில்களை வைத்துள்ளது. ஆம் அணு வெடிப்பு ( Fission) முதல் உலகத் தோற்றம் வரை அனைத்திற்கும் ஒரு காரணக் காரியத்தை நமது சித்தர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அணுவெடிப்பிற்கும் மின்காந்த அலைகளுக்கும் தொடர்பு இருப்பதால் இப்பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டிருக்கிறதாம். எனவே பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் அதனதன் வட்டப்பாதையில் ஒன்றையொன்றை சார்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறதாம்.
அறிவியல் முன்னேற்றங்களினாலும் ஆய்வுகளினாலும் உறுதிச் செய்யப்பட்ட இந்த கண்டுப்பிடிப்புகள் யாவும் நம்முடைய ஆன்மீகக் கருத்துகளோடு ஒத்துப்போகின்றன.

அணுவிற்குள் அணுவாகி இருக்கும் ஆதிப்பிரான்

அணுவிற்குள் அணுக்கள் இருப்பதும் அதைச் சுற்றி பிற அணுக்கள் இருப்பதையும் இன்றைய விஞ்ஞானிகள் நுண்ணோக்கி மூலமும் பிற கருவிகள் மூலமும் கண்டுப்பிடித்து அறிந்திருக்கிறார்கள். ஆனால் இதனை திருமூலர் பல நூறு நூற்றாண்டுகளுக்கு முன்பு ( திருமூலர் காலம் சுமார் 3000 ஆண்டுகள் என்றும், கி.பி 4 அல்லது 5 நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன) அணுவிற்குள் சூட்சுமமான முறையில் இருக்கும் ஆதிப்பிரானைப் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார்.
அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
- திருமந்திரம்
வாழையடி வாழையாக சன்மார்க்க மரபில் வந்த வள்ளல் பெருமானார் இன்னும் ஒரு படி மேலாகச் சென்று இன்றைய அறிவியல் விஞ்ஞானிகளும் வியப்படையும் வண்ணம் கூறுகிறார். கவனியுங்கள்.

தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி

அணுவிற்குள் இருக்கும் இறையைப் பற்றி கூறும் வள்ளல் பெருமானார் ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரையை இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கும் அளித்துள்ளார்.

தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி

ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி

மரணமில்லாப் பெருவாழ்வும் மனித வாழ்வும்

மரணமில்லாப் பெருவாழ்வு என்பது தெய்வ நிலையாம். மூலப் பரம்பொருளாகிய ஆதி நிலையாம். இந்நிலையைத் திரும்ப அடைவதற்காக உயிர்கள் தங்களின் மல அழுக்குகளைப் பக்குவத்தாலும், குருவருளாலும், திருவருளாலும் நீக்கிக்கொண்டு, தன்னுடைய ஆரம்ப நிலையான- எங்கிருந்துப் புறப்பட்டதோ! எந்தக் காரணத்திற்காக இப்புவிக்கு வருவிக்கவுற்றதோ! அந்தக் காரணக் காரியத்தை திருவருள் உதவியுடன் அடைந்து, மல அழுக்குகளைப் போக்கிக்கொண்டு தன்னுடைய ஆதிநிலையான இறைநிலையை அடையத் திரும்புகிறதாம். இந்நிலை ஒரு தொடர்ப் பயணமாம்.

சத்தியமும் அசத்தியமும் இப்பயணத்தில் மாறி மாறி ஒரு யுகத் தோற்றத்தை உண்டாக்கி, முடிவில் ”சத்தியத்தை உயிர்கள் எவ்வாறு வந்தடைகின்றன என்பது திருவருளின் எண்ணமாம்”. சூட்சும தேகத்தில் இருக்கும் இவ்வுயிர்கள் சத்தியத்தை உணருவதற்காக பல யுகங்கள், வருடங்கள், மாதங்கள் காத்திருந்து ஆதிப்பிரானின் திருவடியை நாடுகிறதாம்.

அருளியியல் வாழ்வும்- சாதனமும்

மனித தேகம் எடுத்த உயிர்கள் அனைத்தும் மாயையின் பிடியில் இருந்து தங்களைத் தளர்த்திக்கொண்டு சத்தியத்தை நோக்கி, பயணத்தைத் தொடர்கின்றதாம். இவ்வாறு சத்தியத்தை நாடும் உயிர்கள் அனைத்தும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதனங்கள் மூலம் சத்தியத்தை உணர முயற்சி மேற்கொள்கின்றதாம். மண்ணுலகம் மட்டுமல்லாது விண்ணுலகிலும் மூலப்பரம்பொருளைக் காண பல யுகங்கள், வருடங்கள் தவம் செய்கின்றார்களாம். இதனை வள்ளல் பெருமானே கூறுகிறார் பாருங்கள்!

திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே
!

இது மட்டுமல்ல. மூலப்பரம்பொருளை அவர்கள் கடுந்தவம் புரிந்துக் காண முயற்சி மேற்கொள்கிறார்கள். ( மலை, குகை முதலிய இடங்களில் ஒரே சிந்தனையுடன் உறு பொறிகளாகிய கரணங்கள் அடக்கி பல யுகங்கள் தூங்காது, தூண் போல அசையாது கடுந்தவம் செய்தும் மூலப்பரம்பொருளைக் காண முயற்சி மேற்கொள் கின்றார்கள்)

கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே

அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே

அளவிறந்த நெடுங்காலம் – அளவிட முடியாத நெடுங்காலமாக சித்தர்கள் யோக நிலையில் இருந்து கரணங்கள் யாவும் இறந்து, கடுந்தவம் செய்தும் காண்பதற்கு அறியவன் மூலப்பரம்பொருள்.

இந்த மூலப்பரம்பொருளை அடைவதற்கு மேற்கூறிய வழிகள் அனைத்தும் மிகக் கடுமையான வழிகளாம். அவ்வழிமுறைகளால் மூலப்பரம்பொருளைக் காண்பதும் மிகவும் அரிதாம். அதனால் வள்ளல் பெருமானுக்கு இறைவனே ஒரு உபாயத்தைக் கூறுகிறார்.

உயிரும்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே

அருளே நம்மியல் அருளே நம் உரு
அருளே நம் வடிவாம் என்ற சிவமே

அருளே நம் அடி அருளே நம்முடி
அருளே நம்நடுவாம் என்ற சிவமே
முடிவுரை

உலகியியல் வாழ்வில் உயிர்நலம் பேணி வாழ்தல் மிகவும் அவசியம். உயிர்நலம் பேணுவதால் கருணையும், தியாகமும், தயா வாழ்வும் மேலோங்கி இருப்பதால் மல அழுக்குகள் தானே நீங்குகின்றனவாம். “நீயே நான்! நானே நீ” என்கிற நிலை உருவாகின்றனவாம். உயிர் பேதங்கள், அறிவுநிலைகள், உணர்வு நிலைகள் கடந்து உயிர் இறைநிலையை அடையும் பொழுது மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டுகிறதாம். எனவே திருவருளின் எண்ணமும் மனிதப் பிறவியின் நோக்கமும் மல அழுக்குகள் நீங்கி ( காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்/மமங்காரம் ) சத்திய நிலையான மரணமில்லாப் பெருவாழ்வு அடைய வேண்டும் என்பதே ஆகும்! ஆகவே உயிர்கள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் அவனருளைப் பெறுவதற்கும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்கும் மட்டுமே! எனவே அருள்- கருணை- அன்பு-தயவு என்கிற சாதனம் மூலம் சத்தியநிலையை அறிந்து மரணமில்லாப் பெருவாழ்வை அடைவது இறைவனின் சித்தமே ஆகும்!

அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே
தகவல் உதவி:

எல்லாம் வல்ல திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணை