Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
தீட்சை-II



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தீட்சை-II


திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், தமிழ்நாட்டில் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில்,பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும்,அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார் , சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தை திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் பரம்பொருள்- குருவாக இருந்து அனைத்தும் கற்பித்தார் என்பது சைவத்தின் நம்பிக்கை.

அற்புதங்கள்


1. மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.(ஞானம்)

2. சிவபெருமானிடத்தேபொற்றாளமும் முத்துப்பல்லக்கும் முத்துச்சின்னமும் முத்துக்குடையும் முத்துப்பந்தரும் உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.

3. பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது

4. பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது.

5. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது.

6. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது.

7. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.

8. விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

குறிப்பு: இக்கட்டுரை சைவ சமயத்தை ஆதரித்து எழுதப்படவில்லை. பரம்பொருள்( அனைத்து தத்தினருக்கும் ஒன்றான ஆண்டவர்) குருவாக இருந்தால் சாகாக்கலை முதல் அனைத்து வித ஆற்றல்களையும் இறைவனிடமே கற்கலாம் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. வள்ளலார் அவ்வழியை எவ்வாறு கடைப்பிடித்தார் என்பது ஆய்வுக்காக பின்னர் எடுத்துக்கொள்ளப்படுகிறது



2 Comments
Muthukumaaraswamy Balasubramanian
ஐயா வந்தனம் நலம் நாடாளும் அக்தே நான் தங்கள்மீது அளவுகடந்த மதிப்பு வைத்துக்கொண்டிருக்கின்றேன் என்பதை முதலில் தங்களிடம் சமர்பித்துக் கொள்கிறேன். திருஞான சம்பந்தர் பற்றி தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளது சைவ சமய வரலாறை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளதாக என்மனதில் படுகிறது. திருஞான சம்பந்தர் என்ற நாயன்மார் ஒருவர் இல்லவே இல்லை .அவர் மனிதர் அல்ல. எல்லாம் தத்துவங்களே என்ற பிறகு.நாம் என் அதை எல்லாம் எடுத்துக்காட்ட வேண்டும்.புதியதாக சன்மார்கத்தில் வருபவர்கள் என்ன எண்ணுவார்கள்?எந்த சமயக் கருத்துகளையும் எடுத்துக் காட்டாமல் நம்மால் சன்மார்கத்தை போதிக்க முடியாத? இது உங்களை குறை சொல்லும் நோக்கத்தால் எழுதப் பட்டதல்ல.வடலூரில் பூஜா முறைகள் எவ்வாறெல்லாம் சபாபதி சிவாச்சாரியாரால் மாற்றப் பட்டுள்ளது என்று நான் சில கருத்துக்களை எழுதியுள்ளேன். தாங்கள் அவற்றை படித்து பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளைத் தங்களிடம் சமர்ப்பிக்கவே உங்கள் இணைய தளத்தில் நுழைந்தேன்.அதனால் இந்தக் கருத்தும் என்னுள் எழுந்தது.மன்னியுங்கள்.நன்றி.
Saturday, May 28, 2011 at 05:50 am by Muthukumaaraswamy Balasubramanian
KUMARESAN KRISHNAMURTHY
ஐயா! உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
ஒரு இலட்சியத்தின் விளைவுதான் இப்படியொடு கருத்து இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
அது, வள்ளல் பெருமானாரின் ஜீவகாருண்ய கருத்துகளை உலக அளவில் எடுத்து வியம்ப வேண்டும் என்று, (திருவருளால் அது நிறைவேற வேண்டும்). அதற்கு உலகில் இருக்கும் அனைத்து மார்க்கங்களையும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அது நிறைவேறுமா என்றும் தெரியவில்லை. வள்ளல் பெருமானார் விருப்பம் எதுவோ? நிற்க,
எந்த சமயக் கருத்துகளையும் எடுத்துக் காட்டாமல் நம்மால் சன்மார்கத்தை போதிக்க முடியாதா?என்று கேட்டுள்ளீர்கள்,
உண்மைதான், ஆனால் உலக அளவில் எடுத்துக்கூற வேண்டும் என்றால் நிறைய ஒற்றுமை வேற்றுமைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு,
இந்தியாவில் தோன்றிய மகான் பாபாஜியும் ,கிரியா யோகமும் உலக அளவில் இன்று பிரபலமடைந்தற்கான காரணம் மகான் யுக்தேஸ்வரர் மற்றும் பரமஹம்சயோகானந்தர் பைபிளையும் கிரியா யோகத்தையும் ஒருங்கிணைத்து உலகிற்கு எடுத்து வியம்பியது தான், அதனால் இன்று கிரியா யோகம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதுபோல் உலக அளவில் வள்ளல் பெருமானாரின் ஜீவகாருண்யநெறி எல்லா யோக நெறிகளையும் விட சிறந்தது என்று எடுத்துக்கூற வேண்டும் என்றால் நாம் பல மார்க்கங்களின் உள்ள கருத்துகளோடு சன்மார்க்கத்தின் உயர்ந்த கருத்துகளையும் எடுத்து வியம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
உதாரணத்திற்கு உயிர்க்கொல்லாமையை திருவள்ளுவர், திருமூலர் மற்றும் மகாவீரர் கூறியிருக்கிறார்கள், இருப்பினும் வள்ளல் பெருமானின் ஜீவகாருண்யம் அவற்றையெல்லாம் விட எவ்வாறு சிறந்தது எடுத்துக்கூற விரும்பினால் திருக்குறளையும், திருமந்திரத்தையும், சமணக்கொள்கைகளையும் சுத்த சன்மார்க்கத்தோடு எடுத்துக்கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதுபோலத் தான் இக்கட்டுரையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
தவறு இருந்தால் மன்னியுங்கள்.
நன்றி
Sunday, May 29, 2011 at 11:00 am by KUMARESAN KRISHNAMURTHY