சமயம் கடந்த சதாவதானி
Read (1928 times)
on 10/31/2006 7:50:16 AM by SpaceTeam
காலங்கள் தோறும் சமயங்களை வளர்த்தது தமிழ். சமயங்கள் தமிழை வளர்த்தன. சமண, பௌத்த நூல்களும், சைவ வைணவ நூல்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய நூல்களும் இவ்வாறு உருவானவையே. அந்தந்த சமயப் புலவர்களும், ஞானியரும் அழியாத காப்பியங்களை அளித்துச் சென்றுள்ளனர். அந்த வரிசையில் வைத்து மதிக்கத் தக்கவரே மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர்.
"இந்தத் தலைமுறையில் மகாமதி பாவலருக்கு தமிழ்த்துறையில் இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் வேறு யாருக்கும் இருந்ததில்லை. அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் தமிழ் மொழியின் வரலாற்றுச் சரிதம் இன்றுவரை ஈன்றெடுத்து வளர்த்துக் கொண்டிருந்த முதுபெரும் புலவர் பெருமரபு இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம்" - இது ரசிகமணி டி.கே.சி.யின் மதிப்பீடு.
ஞானியார் அப்பா நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் ' இடலாக்குடி ' யில் வாழ்ந்து தமிழால் இஸ்லாமிய சமயத்தை வளர்த்தவர். அவர் மரபில் வந்த அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தவரே செய்குதம்பி.
அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பிஇம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.
எனினும் இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. அக்காலத்தில் இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார். அவரது தமிழ்ப்புலமை,கண்டு ஆசிரியரே வியந்து போனார்.
ஞானியார் அப்பாவின் ' மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு ' என்னும் நூலை அச்சிட சென்னை 'இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு ' தமிழறிந்த இஸ்லாமியர் தேவைப்பட்டார். சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21, அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும் புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர். மாதம் ரூ60/-ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர். அவர் வறுமையை மறந்து வாழத் தொடங்கிய காலம் இதுவே.
இக் காலத்தில்தான் சிந்தையள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப்பதிப்பித்தார். வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு, தேவலோகத்துக் கிரிமினல் கேசு என்னும் நூல்களும்எழுதிப் பதிப்பித்தார். இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவியது. உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும், நிகழ்த்தினார். அஞ்சாமை கேட்பவரைக் கவரும் சொல்வன்மை, சமயச் சார்பற்ற நடுநிலைமை .
இட்டா பார்த்தசாரதி தலைமையில் நடந்த ஒருவிழாவில் அவருக்குப் ' பாவலர் ' என்னும் பட்டம்அளித்துப் பாராட்டினார். அன்று முதல் செய்குதம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார். அப்போது அவருக்கு வயது 27.
அக்காலத்தில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை 'திருஅருட்பா' என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்து வந்தார். கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். தீர்ப்பு நாவலருக்கு எதிராக முடிந்தது. எனினும்'அருட்பா?மருட்பா?' விவாதம் தொடர்ந்தது.
இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் மறைந்தனர்.எனினும் ஆறுமுக நாவலரின் மாணவர் கதிர்வேல் பிள்ளை தொடர்ந்து அருட்பாவை எதிர்த்து வந்தார். அவர் கூற்றில் நியாயம் இல்லை என்பதையறிந்த பாவலர், கதிர்வேலுக்கு எதிர்வேலாகக் களத்தில் குதித்தார். தம் வாதத் திறமையால் அருட்பா அணியை வெற்றிக்குக் கொண்டு வந்தார்.
ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ' தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை 'மருட்பா' என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ' அவை அருட்பாதாம் ' என்று சொற்பொழிவாற்றினார்.
அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுதுஎன் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார்.என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்.
பாவலர் அவதானக் கலையிலும் சிறந்து விளங்கினார். 1907 மார்ச் 10-சென்னை விக்டோ ரியா மண்டபத்தில் சதாவதானத்தை அரங்கேற்றினார். வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமைதாங்கினார். காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன்கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் திருவேங்கடசாமி நாயுடு, புலவர் கா.நமச்சி வாய முதலியார் திரு.வி.க. , டி.கே.சி., முதலிய தமிழறிஞர்களும், இந்து சுதேசமித்திரன் ஆசிரியரான ஜி.சுப்பிரமணியஐயரும்,திரளான மக்களும் பார்வையாளர்களாக இருந்தனர்.
இந்த அவதானம் வெற்றி முழக்கோடு முடிந்ததை முன்னிட்டு பாமாலைகளும், பூமாலைகளும்,பொன்னாடைகளும் சாற்றப்பட்டன. நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இட்டாபார்த்தசாரதி தங்கத் தோடாக்கள் இட்டுப் பாராட்டினார். சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் ' மகாமதி ' பட்டம்வழங்கினார். தலைவர் ' சதாவதானி ' பட்டம் வழங்க, ' மகாமதி சதாவதானி ' செய்குதம்பிப் பாவலர்வாழ்க' என அரங்கமே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தது.
பாவலர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர். அன்றைய, ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.
"1937ஆம் ஆண்டில் என நினைக்கிறேன் , பாவலர் நாகர்கோயில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர். இதைக் கேட்ட பாவலர் நகைத்தார். நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த இவருக்கு இது ஒரு பொருட்டோ ?
பாவலர் இறுதியாக உரையாற்றிய இடம் தஞ்சாவூர். அப்போது அங்கு சொன்னார்; தாம் தஞ்சாவூருக்கு வந்திருப்பது, தம் சாவூருக்கு வந்திருப்பதாக சிலேடையாகக் கூறினார். அதன் பிறகுஅவர் நீண்ட நாள் வாழவில்லை.
1950 பிப்ரவரி 13-ல் அவர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணி தலைமை
தாங்கினார்
"ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி
பாவலனை
எந்நாள் காண்போம் இனி"
என்று வருந்திப் பாடினார்.
பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது. பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு'என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்ச் சங்கமாய்த் திகழ்ந்து அவரைப் போலவே தமிழ் வளர்க்க வேண்டும் என்பது அறிஞர்களின் விருப்பம்.
மத நல்லிணக்கத்தைப் பற்றி அரசியல்வாதிகள்பேசுவதை விட ஆன்மிகவாதிகளும், அறிஞர்களூம் பேசுவதே உண்மையான பயனை உலகுக்கு நல்கும். பாவலர் வாழ்க்கையே அதற்கோர் எடுத்துக்காட்டு,இருட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதை விட ஒரு சிறு விளக்கேனும் ஏற்றுவது மேலானதல்லவா!
(இன்று செய்கு தம்பி பாவலரின் 125_வது பிறந்தநாள்)
(கட்டுரையாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிஆசிரியர் சங்கஇதழாசிரியர்)
தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999