Re: வள்ளல் அடைந்த நிலையும் மற்ற சித்தர் பெருமக்கள் பெற்ற நிலையும் - ஒரு ஒப்பீடு
on 11/5/2008 9:54:51 PM by Ramanujam
ஒப்பீடு செய்ய முடியாத நிலையை காண்பித்த வள்ளல் பெருமானை
ஒப்பிடச் செய்தல் எங்ஙனம் ?
புறத்திருந்து வழிபாடு செய்த ஞானியர், யோகியர், சித்தர் பெருமக்கள் எல்லாம்
வேண்டிப் பெற்றது, இறைவனது திருவடி நிலையில் சேர்வது ஒன்றுதான்.
முக்தி ஒன்றுதான்.
அதில், மேல் பிறப்பு உண்டு
தேவர்களும் குறைப்பிறப்பு உடையவர்கள்
என்பதை இதுவரை யார் சொன்னது ? அவர்களும் மனிதப் பிறப்பு அடைந்துதான்
மேலிலையுற வேண்டும். சுத்த சன்மார்க்கநிலை நின்று ஒழுக வேண்டும் என்பதை
யார் சொன்னார் ?
வள்ளல் பெருமான் இறவாமை வேண்டும் என வேண்டியதோடு அல்லாமல் அதனை
அடையப் பெற்றவர்.
அதனை தமது ஆன்ம உரிமைச் சகோதரர்களாகிய அனைவரும் பெற வேண்டும்
என்ற உயரிய நோக்கில், நால் வகை ஒழுக்கங்களையும், மோட்ச வீட்டிற்கு எது
இட்டுச் செல்லும் என்ற நிலையான ஜீவகாருண்யத்தையே வாழ்க்கையாகக்
கொண்டு வாழும் முறைமையினையும் திருஅருட்பாக்களிலும் உபதேசப்
பகுதிகளிலும் பாடிச் சென்றுள்ளார்.
உடம்பு வரும் வகையினைப் பற்றி அறிவித்துள்ளார்.
இந்த உடம்பினை ஏன் பொன்போல் பாதுகாக்ல்க வேண்டும் என
தெரிவித்துள்ளார்.அதற்கென ஏற்பட்ட இயற்கை மூலிகைகளை
பட்டியலிட்டுள்ளார்.
இறந்தால், எரிக்கக் கூடாது புதைக்க வேண்டும் என பாடல்கள் மூலம்
விளக்கியுள்ளார்.
சன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கு அன்றி மற்றையோருக்கு என்ன
விளையும் ?
இறப்பொழித்து மரணமில்லாப் பெருவாழ்வினை பக்குவ
ஜீவர்களுக்கு காலத்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்குவார்
என வலியுறுத்திச் சொன்னார்.
மந்தகரனுக்கு, தீவிரதரனுக்கு என்று வகைப்படுத்தி அவரவர் தரத்திற்கொப்ப
ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாவது எங்ஙனம் என அறிவித்துள்ளார்.
அளவுகோலே இல்லாத சுத்த சன்மார்க்க நெறி, எதனாலும் ஒப்பிடவே முடியாது.
அருட்பாக்களை படிப்பதன் மூலமும் பெருமானாரின் உபதேசப்பகுதிகளைப்
படிப்பதன் மூலமும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன்
மூலமும், அனுபவ வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலமும் தான் வள்ளலார்
என்ன சொல்லிச் சென்றுள்ளார் என்பதை அறிய முடியும்.
மற்றபடி ஏகதேசமாக சுத்த சன்மார்க்கத்தையும் வள்ளல் பெருமானின் நெறியினைக்
கற்க வேண்டும் என்ற மேலோட்டமான எண்ணங்களுடன் பயின்றால் அது,
இது போன்ற கேள்விகளுக்குத்தான் வழி வகுக்கும்.
முதலில் இந் நெறியினை முழுமையாக நம்ப வேண்டும்.
பெருமான் 1872ல் இப்போது நடக்கும் கலியுக புருஷனின்
காலம் இன்னும் 27 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்றார்.
அதன் பின்னர் பெருமான் சொன்னது போல் இது ஞான சித்தர்களின் காலம்.
இதுவரை இதனைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற
சிந்தனை, சுத்த சன்மார்க்கம் பயில்வோருக்கு இருக்கக் கூடாது.
மூடம் உண்டாகும்.
எனவே 100 சதவீதத்திற்கு - 1000 சதவீதம் நம்பிக்கை வைத்து இதனைப்
பயின்று வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பிறவியில்
இந்திரிய ஒழுக்கத்தை மட்டுமாவது கடைப்பிடித்தோமா என்று ஒரு
சன்மார்க்கி - ஒரு சன்மார்க்கக் கூட்டம் நடைபெற்றபோது கேள்வி எழுப்பினார்.
உண்மை.
எத்தனை பேர் நால்வகை ஒழுக்கங்களில் இந்த ஒரு ஒழுக்கத்தினை முழுமையாகப்
பின்பற்றுகின்றோம்.
இதனை எல்லாம் தீவிரமாக சிந்தனை செய்யவேண்டும்.
ஆண்டவர் வெளியில் இல்லை. ஒவ்வொருவர் தலைநடு இடத்தே உள்ள
கர வடிவக் குழியில், சிற்சபையாக இருந்து கொண்டு அருள் நடனம் புரிந்து அனைத்து
சக்திகளையும் உள்ளடக்கி நமக்கு, வேண்டினவை எல்லாம், காலத்தே - நாம்
விரும்புகின்றோமோ, இல்லையோ, கொடுத்துக் கொண்டே உள்ளார். அவர்
கருணை மட்டுமே தமது உருவாகக் கொண்டவர்.
திருஅருட்பாவிலே வள்ளல் பெருமான் பாடிவைத்தது காலத்துக்கும் பொருந்தும்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் கண்ணளிக்கும் களிப்பே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவ்ர்.
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
என் அரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இவ்வளவையும் அருளும் அந்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காட்டிக்கொடுத்து,
இதுவரை யாரோ ஒருவன் பூட்டி வைத்த பூட்டினைத் திறந்து வைத்து -
கையறவில்லாத நடுக் கண் புருவப்பூட்டு
கண்டுகளிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர்மிக உய்யும் வகைஅப்பர் விளையாட்டு
ஆடுவதென்றே மறைகள் பாடுவதுபாட்டு.
என்று வெகு எளிமையாக ஆண்டவர் இருக்கும் இடம் குறித்து
தெரிவித்து, சகலத்தையும் விட்டு விட்டு வந்ததால் தான் சுகம்
அடைந்தையும் தெரிவித்தவர்.
தம்மைப்பற்றித்தெரிந்து கொள்ளாததால் அல்லவோ என்னை
எல்லோரும் சுற்றி வருகின்றார்கள் என உளம் நொந்தவர்.
தாம் மண்ணுலகில் பூத உடலில் தங்கியிருந்த வரை தமது
கொள்கைகளை யாருமே கடைப்பிடிக்க வில்லையே என்று
சொல்லி, ஆண்டவர் வருகின்ற காலத்தைப் பற்றியும், இதுவரை
இருந்தது போன்று வீண் காலம் கழித்துக் கொண்டிருக்கக் கூடாது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரும் காலம் சமீபித்து விட்டது
எனவே ஜீவர்கள் பக்குவம் அடைந்து, ஆண்டவர் மேனிலையுற்றுவிக்கும்
தருணம், அதனை மனித குலம் முழுமையுமே அடைய வேண்டும் என்ற
ஆதங்கத்தில் உரை நிகழ்த்திச் சென்றவர்.
ஏன் உரைத்தேன் .. இரக்கத்தால் உரைத்தேன் .. என்கின்றார்.
ஐயோ நான் இல்லைவில்லை என்றால் இந்த மக்கள் என்ன பாடுபடுவார்களோ ..
என்று, தாம் இறை நிலை அடையும் முன் கூட மனித குலத்துக்காக கண்ணீர்
நீர் மல்கியவர்.
ஏறாத மேல் நிலை உற வேண்டுமெனில், தயவு வேண்டும். தயவு ஒன்றே தம்மை
மேலேற்றியது. தயவுக்கு ஒருமை வேண்டும். ஒருமை வந்தால், தயவு வரும்.
தன்னனயும் இரக்கந்தன்னையும் பிரித்தால் உயிர்விடுவேன் என்றவர்.
இவரை எவருடன் ஒப்பிடுவது > > ? ?
அளவுகோலுக்குட் படாததுஅவர் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறி.
அதனை அளவு செய்ய ஒரு கேள்வி எழலாமா ? ..
இதனை கேள்விஎழுப்பிய அன்பரின் சிந்தனைக்கே விடவேண்டியுள்ளது..
தயவு.